தேனியில் வாடகை கார் ஒட்டுனராக இருக்கும் மோகன்லால், மனைவி ஷோபனா மற்றும் மகன் மகளுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். இவர் பழைய மாடல் அம்பாசிடர் காரை தனது இரண்டாவது மனைவி போல் பாவித்து வருகிறார். மோகன்லால் காரை மெக்கானிக் ஷாப்பில் விட்டிருந்தபோது கஞ்சா கடத்தியதாக அவரது காரைபோலீஸ் நிலையம் கொண்டு செல்கின்றனர். இதை அறிந்த மோகன்லால் போலீஸ் நிலையம் சென்று காரை திரும்ப பெற போகும்போது இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வர்மாவும் சப் இன்ஸ்பெக்டரும் இணைந்து மலைப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு செல்ல வேண்டும் என அழைத்து செல்கின்றனர். அப்போது மோகன்லாலுக்கு தெரியாமல் கார் டிக்கியில் இருந்த ஒரு சடலத்தை இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வர்மாவும் சப் இன்ஸ்பெக்டர் பினு பப்புவும் திடீரென மலைப்பகுதியில் வீசுகின்றனர். அந்த சடலம் யார் என்று அவர் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதே சமயம் அவரது மகனும் காணாமல் போகிறான். இறுதியில் அந்த சடலம் யார்? காணாமல் போன மகன் கிடைத்தானா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் மோகன்லால் சாதாரண அம்பாசிடர் டிரைவராகவும், பொறுப்பான குடும்பத் தலைவனாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். முதல்பாதியில் சின்ன சின்ன குறும்புத்தனத்துடன் இயல்பாகவும் இரண்டாம் பாதியில் ஆக்ரோசமாகவும் நடித்து மிரட்டி இருக்கிறார். மனைவியாக நடித்திருக்கும் ஷோபனா யதார்த்தமான நடிப்பினால் படத்துக்கு பலம் சேர்த்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வரும் பிரகாஷ் வருமா வில்லனாக நடித்து அசத்தி இருக்கிறார். இவர் படத்தின் இரண்டாவது கதாநாயகன் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவரது வில்லத்தனம் பார்வையாளர்களுக்கு வெறுப்புணர்வை தூண்டுகிறது. சப் இன்ஸ்பெக்டர் ஆக பினு பப்பு, போலீசாக பர்கான் பாசில் மற்றும் தாமஸ் மேத்யூ சிறப்பு தோற்றத்தில் வரும் பாரதிராஜா, இளவரசு ஆகியோர் நடிப்பு கதைக்கு பக்கபலமாக நடித்து இருக்கிறார்கள்.
ஆணவ கொலையை மையமாக கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தருண் மூர்த்தி. மெதுவாக தொடங்கும் திரைக்கதை போக போக வேகம் எடுத்து ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கிறது. படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வண்ணம் விறுவிறுப்பான திரில்லரோடு அடுத்தடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ஜேக்ஸ் பிஜாய்யின் இசை படத்திற்கு பெரிய பலம். சாஜி குமாரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. Rejaputhra Visual மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.