நாயகன் சிவா கடற்கரை ஓரத்தில் விடிவி கணேஷ் நடத்தி வரும் உணவு விடுதியில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே ஊரில் வசிக்கும் பிரியா ஆனந்தும் காதலித்து வருகிறார்கள். ஒரு நாள் கடற்கரை ஓரத்தில் யோஷினோரி தாஷிரோ என்ற ஒருவர் மயக்க நிலையில் இருக்கிறார். இவரை சிவா மற்றும் குழுவினர் காப்பாற்றுகிறார்கள். இதிலிருந்து யோஷினோரி தாஷிரோ, சிவாவுடன் பயணிக்க ஆரம்பிக்கிறார். மல்யுத்த வீரர் போல் யோஷினோரி தாஷிரோ இருந்தாலும் குழந்தை போல் நடந்துக் கொள்கிறார். யாரிடமும் பேசாமல் குழந்தை போல் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். இவரால் சிவாவிற்கு பண நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், யோஷினோரி தாஷிரோ யார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறார். இதில் யோஷினோரி தாஷிரோ ஜப்பான் நாட்டில் பெரிய மல்யுத்த வீரர் என்று சிவா தெரிந்துக் கொள்கிறார். ஆனால், ஜப்பான் நாட்டிற்கு சிவாவால் அனுப்ப முடியவில்லை. இறுதியில் யோஷினோரி தாஷிரோவை சிவா ஏன் அனுப்ப முடியவில்லை? யோஷினோரி தாஷிரோ ஏன் குழந்தை போல் நடந்துக் கொள்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சிவா, வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் பிரியா ஆனந்த் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். சிவாவிற்கு பக்கபலமாக படம் முழுக்க பயணித்து இருக்கிறார். யோஷினோரி தாஷிரோ குழந்தை போல் முகபாவனை வைத்தும், மல்யுத்த வீரராகவும் நடித்து கவர்ந்து இருக்கிறார். விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து வந்தவரை மீண்டும் அந்நாட்டிற்கே அனுப்புவதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹோசிமின். பெரிய நடிகர்களை வைத்து அவர்களிடம் வேலை வாங்காமல் விட்டிருக்கிறார். நடிகர்களின் நடிப்பை வீணடித்திருக்கிறார். காமெடி காட்சிகள் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்த்தி இருந்தால் ரசித்து இருக்கலாம். நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கலாம். ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.Vels Film இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.