நாயகன் நவீன் சந்திரா போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவர் எந்த கேஸ் என்றாலும் சாமர்த்தியமாக முடித்து விடுகிறார். இந்நிலையில் சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது. கொலை செய்யப்பட்டவர்களை போலீஸ் கண்டுபிடிக்காதளவில் உடலை எரித்து விடுகிறார் சைக்கோ கொலையாளி. இந்த கேஸை விசாரணை நடத்தி வரும் போலீஸ் ஒருவர் விபத்தில் சிக்குகிறார். இதனால் இந்த கேஸ் நவீன் சந்திராவிடம் வருகிறது. அடுத்தடுத்து கொலைகள் நடக்க, நவீன் சந்திரா விசாரணையை தீவிரமாக்குகிறார். மேலும் இந்த விசாரணையில் பல தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் நவீன் சந்திரா சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்தாரா? சைக்கோ கொலையாளி யார்? எதற்காக கொலை செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு கவனிக்க வைத்து இருக்கிறது. படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் நடித்து இருக்கிறார். இவரை காதலிப்பவராக நடித்து இருக்கும் ரியா ஹரி, தலைமை ஆசிரியராக வரும் அபிராமி, போலீஸ் அதிகாரிகளாக வரும் ஆடுகளம் நரேன், திலீபன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் ரித்விகா.
சிறுவயதில் நடந்த பாதிப்பை மனதில் வைத்து பழிவாங்கும் கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ். பழைய கதை என்றாலும் திரைக்கதையில் புதுமை காண்பித்திருக்கிறார். முதல் பாதி திரைக்கதை புரியாமல் நகர, இரண்டாம் பாதி திரைக்கதை விறுவிறுப்பாகவும் நகர்த்தி இருக்கிறார். கிளைமாக்ஸில் யாரும் எதிர்பாராத திருப்பம் படத்திற்கு பெரிய பலம். லாஜிக் மீறல்கள் தவிர்த்து இருக்கலாம். இமானின் இசையில் பாடல்கள் பெரிதும் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையும் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். கார்த்திக் அசோகனின் கேமரா கிரைம் திரில்லர் கதை தேவையான அளவு படம் பிடித்து இருக்கிறது. AR என்டேர்டைன்மென் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.