ஈரோட்டு தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து, ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர் அசோக் செல்வன். பள்ளிக்குப் புதிதாக வந்து சேர்ந்த கார்த்திகா மீது காதல் கொள்கிறார். ஆனால், பள்ளிப் படிப்பு முடியும் வரை தனது காதலை சொல்லாமலே இருந்து விடுகிறார். அடுத்து இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்கிறார். அங்கு உடன் படிக்கும் சாந்தினி சௌத்ரியைக் காதலிக்கிறார். ஆனால் அந்தக் காதலும் பிரிவில் தான் முடிகிறது. பின்னர் வேலை தேடி சென்னை வருகிறார். அங்கு பள்ளியில் படித்த கார்த்திகாவை மீண்டும் பார்க்கிறார். இத்தனை வருடங்கள் கடந்தும் மனதில் அழியாமல் நிலைத்திருக்கும் தனது காதலைச் அவரிடம் சொல்லலாம் என முயற்சிக்கிறார். அதற்காக சில பல விஷயங்களைச் செய்கிறார். அத்தனை முயற்கிளுக்குப் பிறகு காதலில் வெற்றி பெற்றாரா?? இல்லையா?? என்பதுதான் படத்தின் மீதிக் கதை .
பள்ளிப்பருவ காதல், கல்லூரி காதல், வேலை தேடும் போது வரும் காதல் என ‘ஆட்டோகிராப், அட்டட் கத்தி, 96’ போன்ற படங்கள் போல், ஒரு இளைஞனின் காதல்களை வைத்து, ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும் என படத்தின் இயக்குனர் சி.எஸ் கார்த்திகேயன் முயற்சித்திருக்கிறார். மேற்கண்ட படங்களின் மற்றுமொரு ‘வெர்ஷர்ன்’ தான் இந்தப் படம்.
இந்தப் படத்தில் அசோக் செல்வன் ‘க்ளீன் ஷேவ்’ தோற்றத்தில் பள்ளி மாணவனாகவும், வேலை தேடும் போது பழைய காதலியை அடைய துடிப்பவராகவும் நன்றாகவே நடித்திருக்கிறார். அவருக்கு காமெடி இயல்பாகவே வருகிறது. நல்ல சுவாரசியமான காமெடியுடன் கூடிய கதை களைத் தேர்வு செய்தால் சில பல ரவுண்டுகள் வருவார். காதல் கதைகளுக்குப் புதுமுகங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என தேர்வு செய்துள்ளார் போலிருக்கிறது.
பள்ளி மாணவியாக கார்த்திகா முரளிதரன். பள்ளிக் காட்சி களில் ஒரு பக்கம் வசனம் பேசியிருந்தாலே அதிகம். பல வருடங்களுக்குப் பிறகு அசோக்கை சந்தித்த பின்தான் அவருடைய நடிப்பும், பேச்சும் வெளிப்படுகிறது. கல்லூரி மாணவியாக சாந்தினி சௌத்ரி. முதலில் அசோக்கைப் பிடிக்காமல் ஒதுங்கி, பின்னர் காதலில் விழுகிறார். பிடித்துப் போய் காதலிப்பவர் பிரிந்து போனதற்கான காரணம் நம்பும்படி இல்லை. கதைக்குள் ஒரு கதையாக வரும் அசோக் செல்வன் எம்பிஏ படிக்கும் காட்சிகளில், எம்பிஏ மாணவியாக, காதலியாக மேகா ஆகாஷ். அடடா, அற்புதமான ஜோடி என சொல்ல வைக்கிறது. இவ்வளவு காதல் கதைகளையும், அசோக் செல்வன் நான் லீனியர் முறையில் பிளாஷ்பேக்காகச் சொல்கிறார். அந்தக் கதைகளைக் கேட்கும் இன்ஸ்பெக்டராக மைக்கேல் தங்கதுரை கதாபாத்திரத்தில் ஒரு காதல் முடிச்சை வைத்திருக்கிறார்கள். கான்ஸ்டபிளாக மயில்சாமி, உடுமலை ரவி கொஞ்சம் கலகலப்பூட்டுட்கிறார்கள்.
அசோக் செல்வனின் அக்காவாக நடித்திருக்கும் விவியசந்த் கவனிக்க வைக்கிறார். அசோக் செல்வன் நண்பராக வரும் அருண்குமார், பல காட்சிகளில் தனது இயல்பான நடிப்பால் யதார்தங்களை சுவாரசியமாய் உணர்த்துகிறார். காதல் படங்களில் பாடல்கள் ஹிட்டாவது அவசியம். அதற்கு லியோன் ஜேம்ஸ் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம். பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கணேஷ் சிவாவின் படத்தொகுப்பில் நிறைய ‘கட்டிட்ங்’ செய்திருக்கலாம். படத்தின் நீளம், முக்கியக் குறையாக தெரிகிறது.